Sunday, March 2, 2008

உடல் ஆரோக்கியம்

ஆரோக்கியமாய் வாழவேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். ஆனால், அதற்கான முயற்சிகளை, வழிமுறைகளை மேற்கொள்கின்றோமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பொதுவாக நோய்வாய்ப் படும்போதுதான் நம் ஆரோக்கியத்தைப் பற்றின அக்கறையும், கவலையும் நமக்கு தோன்றுகின்றது. அதுவும் சிறிது நாட்களுக்குத்தான். நோயின் வேகம் குறைந்தவுடன் இந்த கவலையும், அக்கறையும் தானாகவே குறைந்துவிடுகின்றன. இன்றைய நிலையில் ஏதேனும் ஒரு வகையில் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களே உடல் ஆரோக்கியத்தைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டு அதனை மேம்படுத்த முயல்கின்றார்கள். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல். இந்நிலை கண்டிப்பாய் அகல வேண்டும். சீரான உணவு, முறையான உடற்பயிற்சி இவற்றின் மூலம் தேக ஆரோக்கியத்தை எப்போதும் நன்முறையில் வைத்துக் கொள்ளவேண்டும். உடல் ஆரோக்கியத்தில் உணவின் பங்கு மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்லவேண்டும் என்றால் பெரும்பான்மையான உடல் நலக்கேடுகள் முறையற்ற உணவினால்தான் தோன்றுகின்றன. உடல் ஆரோக்கியத்தில் உணவின் பங்கு குறித்தும், உடல் நலம் பேணிக்காக்க செய்யவேண்டியவை குறித்தும் ஏராளமான தகவல்களைத் திரட்டி, இந்த பகுதியில் தொகுத்துத் தர உள்ளோம். உடல் பருமன் சுட்டு (Body Mass Index) உணவு வழிகாட்டி கூர்நுனிக்கோபுரம் (Food Guide Pyramid) பரிமாறும் அளவுகள் (Servings) ஆரோக்கிய உணவு (Healthy food) ஆறு சுவைகள் (six tastes)

உடல் பருமன் சுட்டு (Body Mass Index) உங்கள் எடை ஆரோக்கியமானதா? உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையை நீங்கள் கொண்டுள்ளீர்களா? என்பதை இந்த உடல் பருமன் சுட்டு கணக்கீட்டின் மூலம் அறிந்துகொள்ளலாம். உடலின் எடைக்கும், உயரத்திற்கும் உள்ள தொடர்பை கீழ்கண்ட சூத்திரத்தின் மூலம் கணக்கிட்டு, விடையாகக் கிடைக்கும் எண்ணைக் கொண்டு உங்கள் உடல் எடையைப் பற்றிய குறிப்புகள் தரப்படுகின்றன. எடை (கிலோவில்) சுட்டு எண் = ------------------------------ X 10000 (உயரம் செ.மீ. X உயரம் செ.மீ.)
உடல் பருமன் சுட்டு எண்ணைக் கொண்டு உடல் ஆரோக்கிய குறைவு ஏற்பட உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கும் வரைபடம் இது.
உணவு வழிகாட்டி கூர்நுனிக்கோபுரம் (Food Guide Pyramid) நமது அன்றாட உணவு, ஆரோக்கியமான உணவாய் அமைய எந்த மாதிரியான உணவு பழக்கத்தை கடைபிடிக்கவேண்டும் என்ற உதவிக்குறிப்பினைத் தரும் கூர்நுனிக்கோபுர வடிவ விளக்கப்படத்தினை உணவு வழிகாட்டி கூர்நுனிக்கோபுரம் என்றழைக்கின்றோம். இதில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுவகைகள் கூர்நுனிக்கோபுரத்தின் அகன்ற அடிபாகத்தில் குறிபிடப்பட்டுள்ளது. கூர்மையான மேல்புறத்தில் மிகவும் குறைத்து உண்ணவேண்டிய உணவுவகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நமது அன்றாட உணவில் ஒரே மாதிரியான உணவு வகைகளைக் கொள்ளாமல், மாறுபட்ட வகைகளைச் சேர்த்து அதன்மூலம் நமக்கு தேவையான ஊட்டங்களையும், சக்தியையும் பெற இந்த உதவிப்படம் வழிகாட்டுகின்றது.
இந்த கூர்நுனிக்கோபுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகள் ஆறு முக்கிய உணவு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை, 1. தானிய உணவுகள்2. காய்கறி உணவுகள்3. பழ உணவுகள்4. பால் உணவுகள்5. இறைச்சி உணவுகள்6. இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள் இந்த ஆறு வகை உணவுகளுமே மனிதனுக்கு மிகவும் அத்யாவசியமானதுதான் என்றாலும், தினசரி உணவில் எவை, எத்தனை பரிமாறும் அளவுகள் (Servings) சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதனை விளக்குவதுதான் இந்த படத்தின் நோக்கம். குறுகிய முதல் நிலையில், மிகவும் குறைவாய் சாப்பிட வேண்டிய இனிப்பு, கொழுப்பு மற்றும் எண்ணெய் வகை உணவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சர்க்கரை, வெண்ணெய், இனிப்பு வகைகள் மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள் முதலியன இதில் அடங்கும். இவற்றில் சக்திகள் (Calories) அதிகம் உள்ளன மற்றபடி முக்கிய ஊட்டங்கள் மிகக் குறைந்த அளவே காணப்படுகின்றன. அடுத்த நிலையில் பொதுவாய் விலங்குகளிடம் இருந்து பெறக்கூடிய உணவுகள் இடம்பெற்றுள்ளன. பால் மற்றும் பாலில் இருந்து பெறப்படும் பொருட்கள் ஒரு பிரிவிலும், முட்டை, இறைச்சி மற்றும் கடல் உணவுகள் மற்றுமொரு பிரிவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகை உணவுகளில் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் மிகுதியாய் உள்ளன. இவை இரண்டு முதல் மூன்று பரிமாறும் அளவுகள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது. மூன்றாம் நிலையில் பொதுவாய் தாவரங்களில் இருந்து கிடைக்கப் பெறும் உணவுகள் இடம்பெற்றுள்ளன. நமக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிக அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தே கிடைக்கின்றது. இவை மூன்று முதல் நான்கு பரிமாறும் அளவுகள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றது இறுதி நிலையான அகன்ற அடிப்பாகத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டிய தானிய உணவு வகைகள் உள்ளன. அரிசி, கோதுமை மற்றும் ப்ரெட்(bread) போன்ற தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் இவற்றில் அடங்கும். ஐந்து முதல் 12 பரிமாறும் அளவுகள் பரிந்துரைக்கப்படுகின்றது.
பரிமாறும் அளவுகள் (Servings) ஒரு நபர் உண்ணும் உணவின் அளவினைக் குறிப்பிட பரிமாறும் அளவுகள் என்ற அளவு முறையைக் கடைபிடிக்கின்றோம். இது ஒரு வரையறுக்கப்பட்ட அளவு முறை கிடையாது. ஒரு உத்தேச அளவே. ஒரு பரிமாறும் அளவு என்பது நாம் உண்ணும் உணவைப் பொறுத்து எடையில், அளவில் மாறுபடும். ஒருவருக்கு எத்தனை பரிமாறும் அளவுகள்(servings) உணவுத் தேவை என்பது அவருக்கு எவ்வளவு சக்திகள்(calories) தேவை என்பதனைப் பொறுத்தது. ஒருவருக்கு எவ்வளவு சக்திகள் தேவை என்பது அவருடைய வயது, பால், உடல், எடை மற்றும் அவர் செய்யும் வேலைகள் போன்ற அம்சங்களைப் பொறுத்தது. தாங்களுக்கு தேவையான சக்திகளின் அளவினை அறிந்து அதற்கு ஏற்றார்போல் உணவு முறையையும் பரிமாறும் அளவுகளின் எண்ணிக்கையையும் அமைத்துக் கொள்ளவும். சில முக்கிய உணவுகளின் பரிமாறும் அளவுகளைக் கீழே குறிப்பிட்டுள்ளோம். தானிய உணவு வகைகள் (ஒரு பரிமாறும் அளவு) ஒரு துண்டு ப்ரெட்அரை கோப்பை சமைத்த அரிசிஇரண்டு ரொட்டிதுண்டுகள்ஒரு அவுன்ஸ் கேக் வகை உணவுகள்கால் கோப்பை சமைத்த தானியங்கள் காய்கறி உணவுகள் (ஒரு பரிமாறும் அளவு) ஒரு கோப்பை கீரைகள்அரை கோப்பை பச்சைக் காய்கறிகள்முக்கால் கோப்பை காய்கறிச் சாறு பழ உணவுகள் (ஒரு பரிமாறும் அளவு) நடுத்தர அளவுள்ள ஒரு பழம் (ஆப்பிள், வாழை...)அரை கோப்பை நறுக்கிய பழத்துண்டுகள்முக்கால் கோப்பை பழச்சாறு பால் உணவுகள் (ஒரு பரிமாறும் அளவு) ஒரு கோப்பை பால்ஒரு அவுன்ஸ் பாலாடைக்கட்டிஅரைக் கோப்பை தயிர் இறைச்சி உணவுகள் (ஒரு பரிமாறும் அளவு) 90 கிராம் சமைத்த இறைச்சிஒரு முட்டை100 கிராம் மீன் உணவு இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள் (ஒரு பரிமாறும் அளவு) ஒரு தேக்கரண்டி வெண்ணெய், நெய் போன்றவைஒரு மேசைக்கரண்டி கிரீம்ஒரு தேக்கரண்டி சர்க்கரை, ஜாம்ஒரு அவுன்ஸ் சாக்லேட்
ஆரோக்கிய உணவு (Healthy food) உயிர் வாழ உணவு தேவை என்பது சாதாரண வாக்கியம். வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால், நமக்கு நிச்சயம் தேவை "ஆரோக்கிய உணவு". ஆரோக்கிய உணவு என்றால் பெரும்பான்மையானவர்களுக்கு நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா வற்புறுத்திக் கொடுத்து வேண்டாவெறுப்பாய் சாப்பிடும் பெயர் தெரியாத கீரைகள் போன்ற ஒரு சில உணவு பதார்த்தங்கள்தான். கட்டாயப்படுத்தலின் பேரில் உண்ணப்படும் ருசியற்ற உணவுகள்தான் ஆரோக்கிய உணவா? என்றால் நிச்சயம் இல்லை. பின் எவைதான் ஆரோக்கிய உணவு? நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச் சத்துக்கள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற, நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நாம் விரும்பி உண்ணும் உணவினையே, அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவினை கூட்டுதல் அல்லது குறைத்தல் மூலம் ஆரோக்கிய உணவாய் மாற்றிக் கொள்ள இயலும். ஆரோக்கிய உணவின் அடிப்படை அம்சங்கள் இந்த மூன்றுதான், 1. நம் உடல்நிலைக்கு ஏற்றது2. தேவையான சத்துக்கள் நிறைந்தது3. அளவோடு உண்பது என்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற உணவு எது என்று யாரேனும் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிப்பது மிகவும் சிரமம். ஒவ்வொருவர் உடல்நிலையும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பொதுவில் எல்லா தரப்பினருக்கும் பரிந்துரைக்கலாம். ஆனால் குறிப்பாக இவைதான் உங்களுக்கு பொருத்தமான உணவு என்று சொல்லவேண்டும் என்றால் தங்களுடைய உடல்நிலை குறித்த முழுமையான விபரங்கள் தேவைப்படும். ஆகையால் ஒவ்வொருவரும் தங்களது உடல் குறித்த உண்மையான நிலையினை மருத்துவரின் உதவியோடு அறிந்து வைத்து இருத்தல் மிகவும் அவசியம். உங்களது எடை மற்றும் உயரத்தினை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக் கொள்ளவும். இது மிகவும் முக்கியமானது. பிறகு தங்களது எடை தங்களது உயரத்தினைப் பொறுத்து ஆரோக்கியமானதுதானா என்பதனை தெரிந்து கொள்ளவும். இதற்கு உடல் பருமன் சுட்டினை (Body Mass Index) பயன்படுத்துங்கள். உங்களது உடல்நிலை ஆரோக்கியமாக சாதாரண நிலையில் உள்ளதா என்பதனை மருத்துவரின் உதவியோடு அறிந்துகொள்ளவும். வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்பு முதலிய விபரங்களையும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். நோய்கள் ஏதேனும் இருப்பின், நோயின் தீவிரம், என்ன வகை, அதனால் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பது போன்ற கேள்விகளுக்கும் பதில் அறிந்துகொள்ளவும். உங்களது உடல் குறித்த விபரங்கள் தெரிந்து கொண்டபின் உணவு மற்றும் உணவுபொருட்கள் குறித்த சில அடிப்படை விசயங்களைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். உணவுப்பொருட்களில் அடங்கியுள்ள சத்துக்கள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றின தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும். ஒருவர் எத்தனை முறை உண்ணவேண்டும், எவ்வளவு உண்ணவேண்டும் என்பது அவரது வயது, பால், எடை, உடல் உழைப்பு இவற்றைப் பொறுத்தது. ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு சக்தி(கலோரி) தேவைப்படுகின்றது என்பதனைப் பொறுத்து அவரது உணவுப்பழக்கத்தினை அமைத்துக் கொள்ளலாம். கலோரிகள் குறித்த பக்கத்தில் இதற்கான விளக்கங்கள் உள்ளன. கலோரி கணிப்பானைக் (Calorie Calculator) கொண்டும் தங்களுக்கு தேவையான கலோரிகளின் உத்தேச அளவினைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். இத்தனை விசயங்களைத் தெரிந்து கொண்டுதான் சமைக்க வேண்டுமா? உண்ணவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பினால் அவசியம் இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டி வரும். காலம் காலமாக பழக்கத்தில் இருந்து வரும் ஒரே மாதிரியான உணவிற்கு உடலை பழக்கப்படுத்தி கொள்வதின் மூலம் ஆரோக்கியமாக வாழ இயலும். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் அது பெரும்பான்மையானவர்களுக்கு சாத்தியமாக இருப்பது இல்லை. இந்த நிலையில் நாம் உண்ணும் உணவு குறித்த அறிவு நமக்கு மிகவும் அவசியம் ஆகின்றது. இதனை தெரிந்து கொள்வதினால் நாம் இழக்கப்போவது ஒன்றும் இல்லை. இதனைத் தெரிந்து கொள்ள நாம் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்கப் போவது இல்லை. ஆகையால் ஆரோக்கிய வாழ்விற்கு இந்த அடிப்படை விசயங்களை அத்யாவசிய அறிவாய் மாற்றிக்கொள்ளுங்கள்.
ஆறு சுவைகள் (six tastes) பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம். தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு,நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன. துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றதுஇனிப்பு - தசையை வளர்க்கின்றதுபுளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றதுகார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றதுகசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றதுஉவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள். துவர்ப்புச் சுவை (Astringent) இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது. இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது. இனிப்புச் சுவை (Sweet) மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது. இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள் பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. புளிப்புச் சுவை (Sour) உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. காரச் சுவை (Pungent) பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது. அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது. கசப்புச் சுவை (Bitter) அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும். பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது. உவர்ப்புச் சுவை (Salt) தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது. இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது. உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும். கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

No comments: